அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான வயது வரம்பு மீண்டும் 57 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கும் பொருந்தும். அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்களும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டித் தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான தேர்வு எழுதுவதற்கு கடந்த ஆண்டு வரை வயது வரம்பு 57 ஆக இருந்து வந்தது. ஆனால், கடந்த ஜூலை மாதம் 139 பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களை தேர்வுசெய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருந்தது. அதில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் உள்பட அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கும் வயது வரம்புக் கட்டுப்பாடு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது.
அரசு கலை -அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு வயது வரம்பு தொடர்ந்து 57 ஆக இருந்து வரும் நிலையில், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு மட்டும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பொறியியல் உதவி பேராசிரியர் நியமனத் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுவது கிடையாது. 3 அல்லது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரலாம்.
தனியார் கல்வி நிறுவனங்களில் வேலை பார்த்து அரசு வேலைவாய்ப்பை எதிர்பார்த்து வந்த பொறியியல் ஆசிரியர்கள் வயது வரம்பு அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, வயது வரம்பை உயர்த்துவது குறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் பரிசீலித்துவந்தது. இந்த நிலையில், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கு வயது வரம்பை மீண்டும் 57 ஆக உயர்த்தி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
விண்ணப்பிக்க கால அவகாசம்
இதற்கிடையே, வயது வரம்பை உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்பட்டுவந்த நிலையில், 139 பொறியியல் உதவி பேராசிரியர் நியமன பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் 9-ம் தேதி அறிவித்தது. தற்போது வயது வரம்பு 57 ஆக உயர்த்தப்பட்டிருப்பதால், உதவி பேராசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் கால அவகாசம் அளிக்கும். மேலும், அரசு பாலிடெக்னிக்களுக்கு 604 விரிவுரையாளர் தேர்வுக்கும் வயது வரம்புச் சலுகையுடன் விரைவில் அறிவிப்பு வெளியாகும்.
No comments:
Post a Comment